Tuesday, April 25, 2006

கண்ணன் கள்வன் - கண்ணன் (ஆலோ)

கண்ணன் கள்வன் - திருவாய்மொழி 9.9.7

மேலை நாட்டில் வாழும் நம்மில் பலருக்கு குளிர் பழகிப் போய்விட்டது.
குத்தும் பனியிலிருந்து கொடூரப் பனி வரை எல்லாம் நண்பர்களே! ஆனால்,
இந்தியாவில் அப்படியல்ல. தாரை உருக்கி, உடலை உருக்கி முடிந்தால்
கல்லையும் உருக்கும் வெயில். இப்போது பனிக்காலங்கள் வந்து போவது கூடத்
தெரிவதில்லை அங்கு. நண்பர் நா.விச்வநாதன் எழுதுவார், "இந்தமுறை குளிர்
அதிகம், சட்டை போடும் படி ஆகிவிட்டது!" என்று :-) நாம் இங்கு ஐம்பது
கிலோ உடை என்ற கவசத்துடன் அலைவது அவருக்குத் தெரியாது :-)) ஆனால், மாதம்
மும்மாரி பொழிந்த காலத்தில் வாடையும் இருந்தது அம்மாநிலத்தே! வாடை
என்றால் எப்படிப் பட்ட வாடை, "அம்பைக் காய்ச்சி அழுத்த உடலினில் எறிவது"
போன்ற வாடை. இந்த வாடைக் காலத்தில் எரியூட்டி அமர்ந்து மகிழும் போது
காதலனும் உடனிருந்தால் கதகதப்பிற்கு கூடுதல் ருசி! ஆனால் காதலன்
இல்லாதபோது?

வாரா ராயினும் வரினும் நமக்கு
யாரா கியரோ தோழி! நீர
நீலப் மைம்போது உளரிப் புதல
பீலி ஒண்பொறிக் கருவிளையாட்டி

நுண்முன் ஈங்கைச் செவ்வரும்பு ஊழ்த்த
வண்ணத் துய்மலர் உதிரத் தண்ணென்று
இன்னாது எறிதரும் வாடையொடு
என்னாயினள்கொல் என்னா தோரே? (குறுந்தொகை 110)

நம் பண்டைப் பழமையின் சித்திரமே போல் அமைவன இப்பாடல்களே. அன்றைய
இலக்கியம் இல்லையேல் நம் சரித்திரமே இல்லை என்பது கண்கூடு. தண்ணென்று
இருக்க வேண்டிய வாடை "எரிகிறது"! இந்த எரிச்சல் குறுகிய பொழுதாகவாவது
அமைகிறதோ, அது "நெடு நல் வாடையாக" அமைந்து விடுகிறது.

வருகின்ற எறிவாடை தனியாக வரக்கூடாதோ? சீற்உற்ற அகிற்புகை, அதனுடன் வரும்
இனிய வாடை, யாழ் நரம்பில் வரும் பஞ்சமம் பண்ணிசை, தண்ணென்ற பசுஞ்சாந்து
நறுமணம், மல்லிகையின் கொல்லும் மணம் இவையெல்லாம் கூட்டணி அமைத்துக்
கொண்டு வருகின்றனவாம். எப்படி இருக்கும் நம் பாராங்குச நாயகிக்கு? அவளோ
அடிபட்டு போயிருக்கிறாள்!

தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே
பாங்கியோனுடன்

என்று சொல்லிவிட்டு, வார்த்தை தவறி விட்டான். மேனி கொதிக்குத்தடீ,
தலைசுற்றி வேதனை செய்யுதடீ! கடுமையுடையதடீ! தோழி! மார்பு துடிக்குதடீ!

பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு
தோயும் மது நீயெனக்கு, தும்பியடி நானுக்கு
வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மையெல்லாம்
தூய சுடர் வானெளியே! பாராங்குச நாயகியே!


என்று சொல்லிவிட்டு,


சொன்னமொழிதவறு மன்னவனுக்கே-எங்கும்
தோழமை யில்லையடி தங்கமே தங்கம்;
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிறான்? அவை
யாவும் தெளிவுபெறக் கேட்டு விடடீ!

என்று அன்னைமார், தோழிமார் எல்லோரிடமும் முறையிட்டுக் கொண்டிருக்கும் எம்
பாராங்குச நாயகிக்கு எறிவாடைதான் ஒன்று குறைச்சல்!

ஆருக்கு சொல்லுவேன் அன்னை மீர்காள்!
ஆர்உயிர் அளவு அன்றுஇக் கூர்தண் வாடை
கார்ஒக்கும் மேனிநம் கண்ணன் கள்வம்
கவர்ந்தஅத் தனிநெஞ்சம் அவன்க ணஃதே
சீர்உற்ற அகிற்புகை யாழ்நரம்பு
பஞ்சமம் தண்பழுஞ் சாந்துஅ ணைந்து
போர்உற்ற வாடைதண் மல்லி கைப்பூப்
புதுமணம் முகந்துகொண்டு எறியும்ஆலோ

(திருவாய்மொழி 9.9.7)

கார் ஒக்கும் கண்ணன் கள்வன்! கார்கால மேகம் போன்று கருணை பொழிகின்ற
கண்ணன். வானம் பார்த்த பூமிக்கு கண்ணடித்து பதில் சொல்லும் கார்கால மேகம்
போன்ற கண்ணன். நிறத்தினிலே கருமை கொண்டான்;-அவன் நேயமுறக் களிப்பது
பொன்னிறப் பெண்கள்! பாராங்குச நாயகியோ மறக்குலப் பெண்*

சோர மிழைத் திடையர் பெண்களுடனே-அவன்
சூழ்ச்சித் திறமை பல காட்டு வதெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
வேண்டியதில்லை யென்று சொல்லி விடடீ!

அவளிடம் வம்பு வைத்துக் கொள்ளலாமோ இக்கள்வன் கண்ணன்? அதுவும் "கண்ணன்
கள்வம் கவர்ந்த அத்தனி நெஞ்சம்" எனவேதான் கேட்கிறாள்:

மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம்-தலை
மறைந்து திரிபவர்க்கு மானமுண்டோ ?

ஆற்றங்கரை தனில் முன்ன மொருநாள்-எனை
அழைத்துத் தனியிடத்தில் பேசியதெல்லாம்
தூற்றி நகர்முரசு சாற்றுவ வென்றே
சொல்லி வருவையடி தங்கமே, தங்கம்!!

காலம் கடந்த பொருள் இறைமை என்பதற்கு அழகிய சாட்சிகள் நம் நம்மாழ்வாரும்,
பாரதியும். நம்மாழ்வாரின் மனோநிலையை வார்த்தைக்கு வார்த்தை படம்
பிடிக்கிறான் எம் கவிக் குயில் பாரதி. நீவீர் வாழ்க.

*நம்மாழ்வார் பாண்டிய நாட்டு (வழுதி வள நாடு) குலத்தோன்றல்.
சித்தார்த்தன் போல் 'அச்சுவை' பெரிது என்று 'இச்சுவை' விட்டவர்

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4