Friday, March 31, 2006

கோதையின் சந்தேகம்

கோதையின் சந்தேகம்

மதியம் அமுதுண்டு விட்டு சற்றே ஓய்வுக் கொள்ளும் பொருட்டு சிறிய மணையைத் தலைக்கு வைத்துக் கொண்டுப் படுத்தார், பெரியாழ்வார். அவருக்கு மதியம் தூங்கும் பழக்கம் இல்லை. வெறுமனே படுத்துக் கொண்டால் முதுகு, கை, கால் எல்லாம் சற்று புத்துணர்ச்சி பெறும். மீண்டும் தெம்பாக தம் பணியைத் தொடரலாம். சிறு இலவங்கத்தையும், கல்கண்டையும் வாயில் இட்டு மென்றுக் கொண்டிருந்தார்.

அவருக்கு சற்று அருகில்,முற்றத்திற்கு பக்கத்தில், ஒரு காலை மடக்கி, மறு காலைத் தொங்கவிட்டு, செம்மரத் தூணில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்த கோதையைக் கண்டார். அவளது கைகள் இரண்டும் இறுக இணைந்திருந்தது. அது மடியில் இருந்தது. அழகிய அமைதியானக் கடலை ஒத்த இரு விசாலமான விழிகள் எங்கோ எதையோ பார்த்துக் கொண்டிருந்தன. அது நிச்சயமாக இவ்வுலகில் இல்லை என்பது மாத்திரம் தீர்மானமாகத் தெரிந்தது. மாதுளம்பழ மணியின் நிறத்தை ஒத்திருந்த இதழ்கள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

பெரியாழ்வார்:என்னம்மா அப்படி ஒரு யோசனை?

ஆண்டாள்:ஒரு சந்தேகம்;தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.

பெரியாழ்வார்:என்ன?

ஆண்டாள்: மனிதர்களின் வாயில் வீசும் வாடை, அவர்களது காமத்தால் அறியாது போனாலும், குழந்தைகளும், நல்லோர்களும் அறிவர். ஆனால் என் இதயத்தை நானறியாதப் போதே கவர்ந்த அந்த கள்ளனின் அதரமும், வாயும் எத்தகைய நறுமணம் வீசும் என்று யோசிக்கிறேன்.

மாடுகளுக்கு ஏற்றாற் போல் அதன் பாஷை பேசும் இடையன் மாடுகளின் தோழனாகி அவற்றை வழி நடத்துகிறான். அது போல் மனிதனாகி நம் தோழனாகி வழி நடத்த வந்த அந்த நாரணன் வாயின் கந்தம் அறிய மனம் ஏங்கியது.....(கண்கள் ஆழ்ந்து பல மேலுலகங்களை துளைத்து எதிலேயோ நிலைக்குத்தியது)
பெரியாழ்வார்: (எழுந்து அமர்ந்தவாறே, ஆர்வத்துடன்) ம்...அப்புறம் ...


ஆண்டாள்: அவனது அதரத்தின் சுவையை நன்கறிந்த கோபியரைக் கேட்கலாம் என்றால், பொறாமையினால் சொல்லாமல் போகலாம்.

பெரியாழ்வார்:(இலவங்கத்தையும் மெல்ல மறந்து திறந்த வாயை மூடாமல் இந்த அதர பிரச்சனையில் ஆழ்ந்து விட்டார்)

ஆண்டாள்: லக்ஷ்மியோ திருப்பாத சேவையில் முழுவதுமாய் ஆழ்ந்து விட்டாள்.அதர ருசியை விட அவளுக்குப் பாத ருசி அதிகம்.

பெரியாழ்வார்: சரியாய் சொன்னாய். அதேதான்.

ஆண்டாள்: புல்லாங்குழலைக் கேட்கலாம் என்றால் அது இரு இதழ்களில் ஒரு இதழை மாத்திரமே ருசித்துள்ளது. அது அரைகுறை ஞானம். அது ஆபத்தானது.

பெரியாழ்வார்:(ஆர்வத்துடன்)என்ன ஆபத்து?

ஆண்டாள்:பூரண ஞானம் நல்லது;ஞானமற்றிருந்தாலும் என்றாவது ஞானம் கிடைக்கும்: அரைகுறை ஞானம் வளரவும் வளராது; வளரவும் விடாது. அது ஆபத்தானது இல்லையா?

பெரியாழ்வார்: (ஆமோதித்து தலை அசைக்கிறார்)

ஆண்டாள்:யோசித்து யோசித்துக் கடைசியாக தகுந்த ஒருவரை கண்டுப் பிடித்தேன்.

பெரியாழ்வார்: யார்? யார் அது? (நன்றாக சப்பணமிட்டு அமர்ந்த்துக் கொள்கிறார்)

ஆண்டாள்: அவரது ஸ்பரிசத்தால் ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கும் சங்கு.

பெரியாழ்வார்: பலே

ஆண்டாள்:அதனிடம் கேட்டேன்:
"அவனது திருவாய் கருப்பூரம் போல் நாறுமா? இதழ் தாமரைப் போன்று இருப்பதால் அதன் வாசம் போல் இருக்கிறதா? பவளம் போன்று வழவழப்புடன், ஒளியுடன், நிறத்துடன் இருக்கும் அதரம் எப்படி?தேன் போல, அமுது போல தித்தித்திருக்குமா? பிறைச் சந்திரனைப் போல வளைந்து புன்முறுவலோடு இருக்கும் அந்த வாய் எத்தகு சுவையோடு இருக்கும்? என்ன நறுமணம் வீசும்? நீலக்கடலில் இருந்து,பஞ்சசனனுடலில் கிடந்து, நீலக் கள்வனிடம் போய் சேர்ந்த வெண்ணிற சங்கே சொல்!" (7 ஆம் திருமொழி)
என்றேன்.

பெரியாழ்வார்: பூம் பூம் பூம் என யுத்த களத்தில் எதிரி இதயம் சிதற முழங்கும் அச்சங்கு உன் மெல்லிய உணர்வுகளை அறிந்து பதில் சொல்லுமா என்ன?

ஆண்டாள்: (மருண்ட மானின் கண்களால் தந்தையை நோக்கினாள்)

பெரியாழ்வார்:அவன் வாய் சுவையை,வாசத்தை நான் சொல்கிறேன்:

"அவனது வாய் பால், இனிப்பான தயிர், நல்ல சந்தனம், சண்பகம், கமலம், நல்ல கருப்பூர வாசத்துடன் இருக்கும்."
(பெரியாழ்வார் திருமொழி - 1:6:9)

ஆண்டாள்: ஓ (கண்கள் பாதி மூடிய நிலையில் ஆழ்கிறது)

பெரியாழ்வார்: அவனுடன் அவ்வளவு நெருங்கி பழகி, அவன் வாய் சுவையை அறியாமலா இருக்கிறாய்?

ஆண்டாள்:(நாணம் மேலிட) இல்லை அப்பா! அவனை நெருங்கும் போது, அவன் பாதத்தைக் காணும் வரைதான் என் நிலையில் உள்ளேன். அவன் பாதத்தைக் கண்ட பின் கண்கள் அதை விட்டு அகல மறுக்கின்றன. இதர புலன்களும் செயல்படுவதில்லை. நான் எங்ஙனம் அதர சுவையை அறிவேன்?

பெரியாழ்வார்:(அதிர்ந்தவராய்)அதர சுவை அறிந்தேன்; மதுர சுவை...........????

ஆண்டாளின் இரு விழிகளும் மூடி இருந்தன.

சிறு சாரலோடு கைகோத்த காற்று சிறு குழந்தைப் போல் கல கலவென்று முற்றத்தின் வழியே ஒடி வந்து ஆண்டாளையும்,ஆழ்வாரையும் சுற்றி வந்து ஆடியது.

காழியூரன்

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4