Friday, March 31, 2006

பதிலை சொல் கோதை

ஒரு சிறிய உரையாடலை முதலில் எழுதுகிறேன். அது சிறுக சிறுக ஆண்டாளை நாம் நெருங்க வைக்கும்.

(காழியூரன்)

பெரியாழ்வார்: கோதை! எவ்வளவு அழகாய் பாடுகிறாய்? உருவிலும், சொல்லிலும், எண்ணத்திலும் உன் அழகு சொல்லொண்ணா வண்ணம் உள்ளது. உன்னை இன்னும் நான் சிறு பெண்ணாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.ஆனால் உன் திருமணத்தைப் பற்றி பிறர் கேட்கும் போது தான் நீ வளர்ந்து விட்டாய் என்பதே உறைத்தது.

ஆண்டால்:(மெலிதாய் புன்னகைக்கிறாள். விரல்கள் உதிரிப் பூக்களை மாலையாகத் தொடுத்துக் கொண்டிருக்கிறது)

பெரியாழ்வார்: (மலர்ந்த முகத்துடன்) சொல். உன் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிராய்?

ஆண்டாள்: (நாணம் முகத்தில் பரவ) உங்களுக்குத் தெரியாததா?

பெரியாழ்வார்: (புன்னகையோடு) சிவந்த முகம் நாணத்தால் மேலும் சிவந்தால் அந்த நாரணன் மாத்திரமே அறிவான். சரி கேட்டதற்கு நேரடியான பதிலை சொல் கோதை!

ஆண்டாள்: (மெல்லிய குரலில்) என்னுடையவர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதை விட யார் என்றே சொல்லி விடட்டுமா அப்பா?

பெரியாழ்வார்: (வியப்பும் மகிழ்வும் மின்ன) சொல்.

ஆண்டாள்: நாராயணன்; (அவளது கை இறைவனின் விக்ரஹத்தை காண்பிக்கிறது)

பெரியாழ்வார்: (அதிர்ச்சித் தோன்ற) எப்படி சாத்தியம்?

ஆண்டாள்: வேறு யார் சாத்தியம் அப்பா?

பெரியாழ்வார்: (குழப்பமாய்) வேறு யாரயினும் சொல்; அவன் அருளால் நடத்தி விடலாம்.

ஆண்டாள்: ஒரு பெண்ணிற்கு ஆணைத்தானே மண முடிக்க வேண்டும்?

பெரியாழ்வார்: (ஒன்றும் பேசாமல் பார்கிறார்)

ஆண்டாள்: (தொடர்ந்து) அவனை அன்றி வேறு யாரும் புருஷனாக (ஆண்) முடியுமா? வேதம் அவன் மாத்திரமே புருஷன் என்றல்லவா கூறுகிறது. இருப்பதே ஒரு ஆண் தான் எனும் போது வேறு யாருக்கு என்னை நீங்கள் மணமுடிக்க முடியும்?

பெரியாழ்வார்:(கண்களை துண்டால் துடைத்துக் கொள்கிறார்; ஒன்றும் பேசாமல் தொடுத்த மாலையை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு கிளம்பினார்)

ஆண்டாள் கீழே சிந்திய உதிரி பூக்களை எல்லாம் எடுத்து ஒரு கூடையில் போட்டுக் கொண்டிருந்தாள்.

காழியூரன்

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4